
தற்போதைய பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையும், துரித வகை உணவுகளும் மக்களின் மனதையும், உடலையும் சீர்கெட்டுப்போக செய்து விடுகின்றன. இதனால், மன அழுத்தம் ஏற்படுவதுடன் பல்வேறு நோய்களுக்கும் ஆளாக வேண்டிய நிலை உருவாகிறது. இதன் விளைவாக, இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் அபாயம் நிகழ்கிறது.
எனவே, இன்றைய வாழ்க்கை முறைக்கு அருமருந்து எதுவென்று கேட்டால், மனதுக்கும், உடலுக்கும் அமைதி தரும் யோகா தான். இந்த நிலையில், சர்வதேச யோகா தினம் இன்று (21-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட் நாளிதழ்கள் இணைந்து தமிழகத்தில் உள்ள 14 முக்கிய நகரங்களில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியது. ஜி ஸ்கொயர் குழும நிறுவனங்கள் (டைட்டில் ஸ்பான்சர் ), ஈஷா பவுண்டேசன் (யோகா பார்ட்னர்), பி ரைட் (ஹெல்த் பார்ட்னர்), அடையார் ஆனந்தபவன் (ஹாஸ்பிடாலிட்டி பார்ட்னர்), சத்யா (அசோசியேட் ஸ்பான்சர்) ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் எளிதாக பங்கேற்கும் வகையில் தினத்தந்தி டாட் காம், டிடி நெக்ஸ்ட் டாட் காம் இணையதள முகப்பு பக்கங்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, கோவை, திருச்சி, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், புதுச்சேரி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், தேனி ஆகிய 14 நகரங்களில் 'யோகா வாழ்க்கையை மாற்றும் ஒரு ஆரம்பம்' என்ற தலைப்பில் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், 10 வயது மற்றும் அதற்குமேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று யோகாசனங்களை செய்து அசத்தினார்கள். சென்னையில் மட்டும் இரவு பெய்த மழை காரணமாக யோகா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.