
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை அருகே உள்ள பழைய தாலுகா அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான ஓய்வறை இருக்கிறது. இந்த நிலையில் இன்று அறையின் மேற்சூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக ஏற்கனவே ஓய்வறைகள் இடிந்து விழும் நிலைமையில் இருப்பதாக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பல்வேறு தரப்பினரிடம் புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.
மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.