தாம்பரம்-கிண்டி இடையிலான ஜிஎஸ்டி சாலை; ரூ.1.16 கோடியில் விரிவாக்க பணி அடுத்தமாதம் முடிக்கப்படும்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

4 months ago 9

சென்னை: ஜிஎஸ்டி சாலையில் ₹1.16 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப்பணிகள் அடுத்தமாதம் முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாம்பரம்-கிண்டி இடையிலான ஜிஎஸ்டி சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. தாம்பரத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னையில் இருந்து தாம்பரம், புறநகர் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களுக்கும் செல்வதற்கு லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றன. இந்த சாலையில் உள்ள மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, சானடோரியம் உள்ளிட்ட சந்திப்புகளில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க குரோம்பேட்டை, துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஜிஎஸ்டி சாலை சந்திப்பு மற்றும் விமான நிலையம் முன்பாக மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதனால், போக்குவரத்து நெரிசல் சற்றே குறைந்தது. இருப்பினும், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை குன்றத்தூர் சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதவிர, பல்லாவரம் சந்தை நடைபெறும் நாளில் வாகன நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனாலும் முழுமையான தீர்வுகாணப்படாத நிலையில், குன்றத்தூர் சாலை, பல்லாவரம் சந்தை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் ஜிஎஸ்டி சாலையில் 1.5 கிமீ தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. 2016ல் தொடங்கப்பட்டு இப்பணிகள் 2020ல் முடிந்து பாலம் திறக்கப்பட்டது.

இதையடுத்து, பாலத்தை இருவழிப்பாதையாக மாற்ற உத்தரவிடப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் இரு மார்க்கமும் வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றப்பட்டது. ஆனால், தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, அந்த பாலத்துக்கு கீழ் உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கிண்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் பல்லாவரம் புதிய பாலத்தின் கீழ் பகுதி சாலையில் செல்லும்போது நெரிசலில் சிக்குகின்றன. அதேபோல் திருநீர்மலை சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அங்குள்ள பாலத்தின் அணுகு சாலையில் சென்று, பல்லாவரம் புதிய சாலையின் கீழ் திரும்பி, மீண்டும் குரோம்பேட்டை நோக்கி செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இருசக்கர, 4 சக்கர வாகன ஓட்டிகள், அங்கு அமைத்துள்ள சாலை தடுப்புகளை கடந்து எதிர்திசையில் வந்து பாலத்தின் கீழேயே சாலையை கடக்கின்றனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் கடும் நெரிசலில் சிக்குகின்றன. இதை தவிர்க்கும் வகையில் பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களும் பாலத்தின் கீழ் இறங்க காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் 500 மீட்டர் தூரத்திற்கு மூன்று வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் சாலை விரிவாக்கப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு அடுத்தமாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பணிகளில் தாமதம் ஏன்?
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பல்லாவரம் மேம்பாலத்திற்கு கீழே உள்ள சாலையில் 500 மீட்டர் நீளத்தை அகலப்படுத்தும் பணிகள் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. 6 மாதங்களில் முடிக்க திட்டமிட்டடிருந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டது. ஏனென்றால் விரிவாக்கத்திற்கு தேவையான நிலமானது ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமானது. இதனால் சாலையை அகலப்படுத்துவதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக முடங்கின. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு மாநில அரசு ₹14 கோடி செலவில் ராணுவ வீரர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்பை கட்ட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நிலத்தை வழங்க ஒன்றிய அமைச்சகம் ஒப்புக்கொண்டது. அதனை தொடர்ந்து பொதுப்பணித்துறையின் ஆதரவுடன், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ₹1.16 கோடியில் சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்தமாதம் இறுதிக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தாம்பரம்-கிண்டி இடையிலான ஜிஎஸ்டி சாலை; ரூ.1.16 கோடியில் விரிவாக்க பணி அடுத்தமாதம் முடிக்கப்படும்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article