ஈரோடு: தாம்பத்ய உறவை அசிங்கப்படுத்திய ஆத்திரத்தில் மகன், மனைவியை கணவரே கொன்றுவிட்டு, புரை ஏறி மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் தற்கொலை செய்ததாக நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. ஈரோடு அடுத்த வெள்ளோடு காந்தி நகரை சேர்ந்தவர் கவின் பிரசாத் (32). பெருந்துறை பனியன் கம்பெனி ஊழியர். இவரது மனைவி அமராவதி (28). இவர்களது ஒன்றரை வயது மகன் ஆதிரன். நேற்று முன்தினம் காலை புரை ஏறி மகன் இறந்து விட்டான் என்றும், இந்த அதிர்ச்சியில் அமராவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கவின் பிரசாத், அமராவதியின் பெற்றோர் நல்லசிவம்-சுசிலா மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து உறவினர்கள் வந்து உடல்களை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவின் பிரசாத்தின் உருக்கமான அழுகையால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பெருந்துறை போலீசாரும் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்நிலையில், அமராவதியின் கழுத்தில் இருந்த காயம் மற்றும் கவின் பிரசாத்தின் நடவடிக்கையில் பெண்ணின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மகள், பேரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி உடல்களை வாங்க மறுத்து நேற்று போராட்டம் நடத்தினர். இதனைடுத்து பெருந்துறை போலீசார், கவின் பிரசாத்தை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர், மனைவி, மகனை கொன்றதை ஒப்புக்கொண்டார். இது குறித்து கவின் பிரசாத் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: தாம்பத்தியத்தில் எனக்கு நாட்டம் குறைந்துவிட்டது. இதனால், இல்லறத்தில் ஈடுபடுவதை தவிர்த்து வந்தேன்.
இதனை சுட்டிக்காட்டி என் மனைவி என்னை அவமானப்படுத்தி வந்தார். இதனால், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 26ம் தேதி தாம்பத்யம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான், தலையணையால் மகனை அமுக்கி கொன்று தொட்டிலில் போட்டு விட்டு மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்றேன். பின்னர், மகன் புரை ஏறி இறந்த அதிர்ச்சியில் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினேன். மனைவியின் கழுத்தில் காயம் ஏற்பட்டதால் என் மீது சந்தேகம் ஏற்பட்டது.
தற்போது வசமாக சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து கவின் பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் வெள்ளோடு போலீசில் அளித்த புகாரில், கவின் பிரசாத்தின் பெற்றோர் பழனிச்சாமி-ஜோதி மற்றும் சிலர் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
The post தாம்பத்ய உறவை அசிங்கப்படுத்தியதால் ஆத்திரம் மகன், மனைவியை வெட்டி கொன்ற வாலிபர்: பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.