தா.பழூர் மே 11:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இடங்கண்ணி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த மே 1 ஆம் தேதி காலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கரகம் புறப்பாடு, அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வந்தது. மேலும், மாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில், விரதம் இருந்து கங்கணம் கட்டிக் கொண்ட பக்தர்கள் பூங்கரகம், அக்னி கரகம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களோடு மற்ற பக்தர்களும் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். இறுதியாக கோயிலை வந்தடைந்த பக்தர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்த நிகழ்வில் இடங்கண்ணி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post தா.பழூர் அருகே திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.