தவெகவிற்கு பெண்கள் வாக்கு வங்கி கிடையாது பாஜவின் சி டீம்தான் விஜய்: அமைச்சர் ரகுபதி கண்டனம்

23 hours ago 5

திருச்சி: புதுக்கோட்டையில் நேற்று அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஐந்து மாதங்களில் தண்டனை பெற்று கொடுத்துள்ளோம். அதை செய்தது தமிழக காவல்துறை தான். பொள்ளாச்சி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யவே காலதாமதப்படுத்தினார்கள். ஆனால் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் புகார் கொடுத்தவுடனேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த குழுவில் இருந்த அதிகாரிகள் அனைவரும் தமிழக காவல்துறையை சேர்ந்தவர்கள் தான்.

ஐந்து மாதங்களில் இந்த விவகாரத்தில் தீர்வு கிடைத்துள்ளது. இதிலிருந்து இந்த அரசு பெண்கள் மீது அக்கறை கொண்ட அரசாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். திமுக அரசு மீது பெண்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதை அறிந்தவர்கள் ஏதாவது ஒன்றைக் கூறி அந்த ஆதரவை குறைக்க முடியுமா என பகல் கனவு காண்கிறார்கள். அவர்களின் பகல் கனவு நிச்சயம் நிறைவேறாது. அதற்கு காரணம் தமிழக பெண்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். யார் தங்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை வழங்குவார்கள், அவர்களுக்கான திட்டங்களை யார் செயல்படுத்துவார்கள் என்பதை நன்கு அறிந்தவர்கள்.

தவெகவிற்கு பெண்கள் வாக்கு வங்கி கிடையாது. அதனால் பாஜவின் சி டீமான விஜய் திமுக அரசை குறைகூறுகிறார். பாஜ வின் `பி’ டீம் குறித்தே நாங்கள் கவலைப்பட மாட்டோம், அப்படி இருக்கையில் சி டீம் குறித்தும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லை, அப்படி யாரும் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் யார் என்று கூறினால் அவர்களுக்கும் தண்டனை பெற்று தருவோம்.

வழக்கு விசாரணை நடந்தபோது யாரும் எதுவும் பேசாமல், விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வந்த பின்பு அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக பொய்யை மட்டும் மூலதனமாக வைத்துள்ளவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள், அது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post தவெகவிற்கு பெண்கள் வாக்கு வங்கி கிடையாது பாஜவின் சி டீம்தான் விஜய்: அமைச்சர் ரகுபதி கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article