சென்னை: சென்னை தரமணி வேதியியல் தொழில் நுட்ப பயிலகத்தில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தொழில் நுட்ப கல்வித்துறையின் தரமணி வேதியியல் தொழில் நுட்பப் பயிலகம் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை தரமணியில் உள்ள வேதியியல் தொழில் நுட்ப பயிலகம் 100% உத்திரவாதத்துடன் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பை தரக்கூடிய பட்டயப்படிப்பினை வழங்கி கொண்டிருக்கிறது. இந்த பயிலகத்தில் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இங்கு டிப்ளமோ இன் கெமிக்கல் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் பாலிமர் டெக்னாலஜி மற்றும் டிப்ளமோ இன் பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் ஆகிய மூன்று பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இப்பாடப்பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். www.tnpoly.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். பதிவுக் கட்டணமான ரூ.150ஐ விண்ணப்பதாரர் டெபிட்கார்டு, கிரிடிட் கார்டு, நெட் பேங்கிங் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதிவுக்கட்டணம் செலுத்த அவசியமில்லை.
கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளான இலவச பேருந்து வசதி, கல்வி உதவி தொகை, புதுமைப் பெண் திட்டம், பிரகதி உதவி தொகை, தமிழ்ப் புதல்வன் உதவிதொகை போன்ற பல திட்டங்கள் வழங்கப்படுகிறது. உடல் ஊனமுற்றவர்களுக்கு மின் தூக்கி(லிப்ட்) வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் உடனடியாக இக்கல்லூரியில் சேர்ந்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தரமணி வேதியியல் தொழில் நுட்ப பயிலகத்தில் மாணவர்கள் சேர்க்கை: அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் appeared first on Dinakaran.