தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை மீட்பதுதான் நிரந்தர தீர்வாக அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

1 day ago 2

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 1,383 தமிழக மீனவர்களை மீட்டுள்ளோம். கச்சத்தீவை மீட்பதுதான் தமிழ்நாட்டு மீனவர்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம் திருவொற்றியூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ரூ.272 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட ரூ.426 கோடியே 13 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதை பண்ணை என 13 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மொத்தம் ரூ.170 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் அலைகள் திட்டத்தை தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ரூ.272 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய 400 ‘கில் நெட்’ படகுகள் – 250 பைபர் படகுகள் நிறுத்தும் வசதியோடு, 60 ஆயிரம் டன் மீன்களை கையாளக் கூடிய வசதிகளுடன் இருக்கும், இந்த சூரை மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்து, உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான், கடந்த ஏப்ரல் 2ம் தேதி சட்டமன்றத்தில், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தனித் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். கச்சத்தீவை மீட்பதுதான் தமிழ்நாட்டு மீனவர்களின் இன்னல்களுக்கு அது நிரந்தர தீர்வாக அமையும். கடந்த 4 ஆண்டுகளில், 97 நிகழ்வுகளில், 185 படகுகளும், 1,383 மீனவர்களும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும்; படகுகளை மீட்க வேண்டும் என்று பிரதமருக்கும், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கும், இதுவரைக்கும் 76 கடிதங்களை எழுதியிருக்கிறேன். அதுமட்டுமல்ல, நேரில் சந்திக்கும் போதெல்லாம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். அதேபோல, திமுக எம்பிக்களும், கூட்டணி எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி உரிமைக்குரலை எழுப்பிய காரணத்தால்தான், இதுவரைக்கும் 1,354 மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 129 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதமும், 26 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீதமும் என்று ரூ.6 கோடியே 84 லட்சம் வழங்கியிருக்கிறோம். இந்த தொகையை ரூ.6 லட்சமாக முதலில் உயர்த்தி, இப்போது ரூ.8 லட்சமாக உயர்த்தி அறிவித்திருக்கிறேன்.

2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில், சிறைபிடிக்கப்பட்ட இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 73 விசைப்படகுகளுக்கு ரூ.8 லட்சம் வீதமும், 9 நாட்டு படகுகளுக்கு ரூ.2 லட்சம் வீதமும் உயர்த்தப்பட்ட விகிதத்தில் மொத்தம் ரூ.6 கோடியே 2 லட்சம் நிவாரணம் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது. மீன்பிடி தடைகால நிவாரண உதவித்தொகை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்தின்கீழ், 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில், ரூ.518 கோடியே 53 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டிருக்கிறது. கல்வியறிவுதான் எல்லோரும் கரை சேருவதற்கான கலங்கரை விளக்கம். அதனால்தான், மீனவச் சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்திய குடிமைப் பணியில் சேர நினைத்தால், அவர்களுக்கு பயிற்சி தர முடிவெடுத்து, இந்த ஆண்டு மட்டும் 39 மீனவ மாணவர்களுக்கு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் செலவில் பயிற்சி தந்திருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் கே.பி.சங்கர், மாதவரம் சுதர்சனம், ஆவடி சேகர், தாயகம் ரவி, துரை சந்திரசேகா, காதர்பாட்சா முத்துராமலிங்கம், எம்.கே.மோகன், ஜோசப் சாமுவேல், எபிநேசர், மூர்த்தி, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் தலைவர் கவுதமன், செயலாளர் சுப்பையன், ஆணையர் கஜலட்சுமி, கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மண்டலக் குழு தலைவர் தனியரசு உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* மீனவர்களுக்கு திராவிட மாடல் அரசு செய்ததை நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்
மீனவர்களின் நலன் காக்க திராவிட மாடல் அரசு செய்திருக்கக்கூடிய திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் முதல்வர் பட்டியலிட்டார். அவற்றில் சில:
* தமிழ்நாடு மீனவர் நலவாரியம் வாயிலாக, 19,997 பயனாளிகளுக்கு பல்வேறு நிவாரணம் மற்றும் உதவித் தொகை திட்டங்களின்கீழ் 25 கோடியே 68 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
* மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படக்கூடிய வரி விலக்களிக்கப்பட்ட டீசல் 18 ஆயிரம் லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில், 4 லட்சத்து 34,668 கிலோ லிட்டர் அளவுக்கு மானிய டீசல் விநியோகிக்கப்பட்டு இருக்கிறது.
* மீன்பிடி நாட்டு படகுகளுக்கு வழங்கப்படுகின்ற வரி விலக்களிக்கப்பட்ட டீசல் 4 ஆயிரம் லிட்டரில் இருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராக உயர்த்தப்பட்டு, 12 ஆயிரத்து 592 மீன்பிடி படகுகளுக்கு வழங்கப்படுகிறது.
* கடலில் மீன் பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்கள் மற்றும் கடலில் மீன்பிடிக்கும்போது அண்டை நாட்டு அரசால் கைது செய்யப்படும் மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் தின உதவித்தொகை 250 ரூபாயில் இருந்து 350 ரூபாயாக உயர்த்தினோம். பிறகு, ரூ.500 ஆக உயர்த்தினோம்.
* மீனவர்களுக்காக கட்டப்பட்ட 8,561 வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.
* 1 லட்சத்து 20 ஆயிரம் மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர் தொழில் புரிய உழவர் கடன் அட்டை, கூட்டுறவு கடன், மகளிர் திட்டம், சுயஉதவி குழு கடன் ஆகியவற்றின் கீழ் ரூ.1,528 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது.

The post தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை மீட்பதுதான் நிரந்தர தீர்வாக அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article