
சென்னை,
தென் மேற்கு பருவமழை தொடங்கினாலும், தற்போது பருவமழை குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் தீவிரம் அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருந்தாலும், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு காற்று வலுவடைந்திருப்பதால், கடல் காற்று உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதிலும் இன்று (வியாழக்கிழமை) இயல்பைவிட 2 டிகிரி வரை வெப்பம் உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் நேற்று சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்) வெயில் பதிவானது. இதன் தொடர்ச்சியாக வரும் நாட்களிலும் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச்சலனத்தால் மழை என்ற சூழ்நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாதம் நிறைவு பெறும் வரையில் இதே வானிலை தான் நிகழக்கூடும்.