தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார கார் சோதனை ஓட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

5 months ago 13

சென்னை: தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார கார் சோதனை ஓட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மகிந்திரா நிறுவனத்தின் கார் தொழிற்சாலையில், மின்சார கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அங்கு தயாரிக்கப்பட்ட மஹிந்திரா புதிய எலெக்ட்ரிக் ஆரிஜின் எஸ்.யூ.வி. மின்சார கார்களான எஸ்.இ.வி. 9 மற்றும் பி.இ. 6 கார்களின் வாடிக்கையாளர் சோதனை ஓட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, இந்த மின்சார காரில் ஏறி அதன் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்களை முதல்வர் கேட்டறிந்தார். காரின் சிறப்பம்சங்கள் குறித்து முதல்வரிடம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கினார்.அப்போது அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் முருகானந்தம், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் வேலுசாமி, மதன்ராஜ், சக்திவேலன், ராஜாகுமார் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது: ஆட்டோமொபைல் துறையில் பல ஆண்டுகளாக தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தொழில்துறையில் ‘நம்பர் 1’ மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள மனிதத் திறன், திறன்மிக்க இளைஞர்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தற்போது, ஓட்டுநர் இல்லாமல் ‘பார்க்’ (வாகன நிறுத்தும் இடம்) செய்யும் வசதி கொண்ட மஹிந்திரா கார்கள் தமிழகத்தில் உற்பத்தியாகியுள்ளன.தமிழகத்திலேயே மின்சார கார்கள் வடிவமைக்கப்பட்ட செய்தி அறிந்து முதல்வர் மகிழ்ச்சி அடைந்தார். தமிழகத்தில் பயின்ற மாணவர்கள் மின் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மின் வாகன உதிரிபாக தயாரிப்பிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.

தமிழகத்திற்கான மின் வாகனங்கள் தமிழகத்திலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கம். தமிழ்நாட்டில் ‘சார்ஜிங்’ நிலையம் அமைக்க ஹூண்டாய் நிறுவனம் ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
தென் தமிழகம் செல்லும் சாலையிலும் மின்சார வாகனங்களுக்கான ‘சார்ஜிங்’ நிலையங்கள் அமைய உள்ளன.பிற நாட்டு பொருள்களை இந்தியா கொண்டு வந்து தயாரிக்கும் நிலை இருந்தது. தற்போது, சொந்தமாக அனைத்து பொருட்களையும் தயாரிக்கும் நிலைக்கு தமிழகம் உயர்ந்துள்ளது. தஞ்சையில் டைடல் பார்க் திறக்கப்பட்டு இரண்டே நாளில் முழு அளவில் நிறுவனங்கள் அங்கு வந்துவிட்டன என்றார்.

 

The post தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார கார் சோதனை ஓட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article