தமிழ்நாட்டில் பாமகவில் தந்தை – மகன் சண்டை வீதிக்கு வந்தது போன்று தெலங்கானா அரசியலில் பூகம்பம்: அண்ணன் – தங்கை மோதல்

1 day ago 4

* நடுவில் சிக்கிக் கொண்டு தடுமாறும் மாஜி முதல்வர் சந்திர சேகர ராவ்
* இங்கேயும் பாஜகவே குடும்ப விரிசலுக்கு காரணமாக இருந்துள்ளது

ஐதராபாத்: தமிழ்நாட்டில் பாமகவில் தந்தை – மகன் சண்டை வீதிக்கு வந்தது போன்று தெலங்கானாவில் அண்ணன் – தங்கை மோதல் பூகம்பமாக வெடித்தது. நடுவில் சிக்கிக் கொண்டு மாஜி முதல்வர் சந்திர சேகர ராவ் தடுமாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலங்கானா என்ற மாநிலம் உருவாவதற்கு காரணமாக இருந்த தெலங்கானா மாநில முன்னாள் முதல் வரும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சித் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்), தற்போது தீவிர அரசியலில் இருந்து ஓய்வில் இருந்து வருகிறார். அவரது மகளான கே.கவிதா, சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், பி.ஆர்.எஸ் கட்சியின் மகளிர் பிரிவு தலைவராகவும் உள்ளார். அதேவேளையில், சந்திரசேகர ராவின் மகனான கே.டி.ராமாராவ் (கே.டி.ஆர்) சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தெலங்கானா அமைச்சருமாக இருக்கிறார்.

கடந்த 2018ம் ஆண்டு முதல் கட்சியின் செயல் தலைவராக உள்ளார். ஆனால் செயல் தலைவர் பதவியை பிடிக்க கே.கவிதா முயற்சிப்பதாக கட்சிக்குள் பேசப்பட்டு வருகிறது. இதனால் அண்ணண் – தங்கைக்குள் அவ்வப்போது முட்டல் மோதல் இருந்து வந்தது. ஏற்கனவே அமலாக்கத்துறையின் பிடியில் இருக்கும் கே.கவிதாவுக்கு, பல்வேறு நெருக்கடிகள் இருப்பதால் கட்சியின் முக்கிய பதவியை கைப்பற்ற நினைக்கிறார். ஆனால் அதற்கு தனது அண்ணன் கே.டி.ஆர் கடும் முட்டுக்கட்டையை போட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, கே.கவிதா தனது தந்தைக்கு தனிப்பட்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதமும் லீக் ஆனதால், குடும்பத்திற்குள் இருக்கும் அண்ணன் – தங்கை சண்டை வெளிச்சத்திற்கு வந்தது.

கே.கவிதா எழுதிய அந்த கடிதத்தில், ‘தெலங்கானா மாநிலம் வாரங்கலில் கடந்த மாதம் நடந்த பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில், கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் ஆற்றிய உரையில், அவர் பாஜகவைப் போதுமான அளவு விமர்சிக்கவில்லை. இது எதிர்காலத்தில் இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்படலாம் என்ற ஊகங்களைத் தூண்டியது’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் கட்சிக்குள் சிலரால் வேண்டுமென்றே வெளியிடப்பட்டதாக கே.கவிதா புகார் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் கே.சி.ஆருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். இதற்கு முன்பும் எனது கருத்துகளை கடிதங்கள் மூலம் அவரிடம் தெரிவித்திருக்கிறேன். சமீபத்தில் சதிகள் நடப்பதாகக் கூறியிருந்தேன்.

ஆனால், ரகசியமான கடிதம் பொதுவெளியில் வந்துவிட்டது. கட்சியில் உள்ள அனைவரும், தெலங்கானா மக்களும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். கே.சி.ஆர் ஒரு கடவுள். ஆனால், அவரைச் சுற்றி சில பேய்கள் உள்ளனர். அவர்களால் பெரும் சேதம் ஏற்படுகிறது. நான் கே.சி.ஆரின் மகள். எனது ரகசிய கடிதம் வெளியானால், கட்சியில் மற்றவர்களின் நிலை குறித்து விவாதிக்கப்பட வேண்டும்’ என்று வருத்தத்துடன் தெரிவித்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின் போது, கே.டி.ஆரை (அண்ணன்) பெயர் குறிப்பிடாமல், தனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவும், தன்னை கட்சியில் இருந்து ஒதுக்க முயற்சிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். கடந்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிறையில் இருந்தபோது, கட்சிக்குள் சிலர் பி.ஆர்.எஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க முயற்சித்ததாகவும், இதை தான் கடுமையாக எதிர்த்ததாகவும் கே.கவிதா கூறினார்.

கே.டி.ஆரை மறைமுகமாக சாடி அவர், பி.ஆர்.எஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவை நிர்வகிக்கும் அவர், கலேஷ்வரம் பாசனத் திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரிக்கும் நீதிபதி பி.சி.கோஷ் ஆணையத்தால் கே.சி.ஆருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் கட்சி தலைமை மவுனமாக இருப்பதாக வருத்தம் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய பாசனத் திட்டமான கலேஷ்வரம், 2014 முதல் 2023 வரை தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால் 2023ல் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பிஆர்எஸ் கட்சி இழந்தது. ஜூன் 3 அன்று, கே.சி.ஆர் ஆணையத்தின் முன் ஆஜராக இருக்கும் நிலையில், கவிதா தலைமையிலான தெலங்கானா ஜாக்ருதி என்ற கலாசார அமைப்பு மட்டுமே போராட்டம் அறிவித்துள்ளதாகவும், கட்சி தலைமை ஏன் மவுனமாக உள்ளது என்றும் கே.கவிதா கேள்வி எழுப்பினார்.

மேலும் காங்கிரஸ் அரசு நமது தலைவர்களின் வீடுகளுக்கு புல்டோசர்களை அனுப்பியும், பி.ஆர்.எஸ் கட்சியை முடக்கி உள்ளதாகவும் கூறி தனது அண்ணன் கே.டி.ஆரை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், குடும்ப பெண்ணுக்கு எதிராக பணம் கொடுத்து சிலரை பேசவைத்து என்ன பயன்? என்று கூறி, கட்சியிலிருந்தும், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக முயன்றபோது கே.சி.ஆர் தன்னை தடுத்ததாகவும் கவிதா கூறினார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், டெல்லி சிறையில் இருந்தபோதும், கே.டி.ஆர் மற்றும் கட்சி தனக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்யவோ, அனுதாபம் திரட்டவோ முயற்சிக்கவில்லை. வாரங்கலில் நடந்த வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் கே.சி.ஆர் மற்றும் கே.டி.ஆரின் பதாகைகள் மட்டுமே இருந்தது. என்னை திட்டமிட்டு ஒதுக்கினார்கள்.

கே.சி.ஆரே தனது ஒரே தலைவர் என்றும், வேறு யாருடைய தலைமையின் கீழும் கட்சியில் பணியாற்ற மாட்டேன் என்றும் தெளிவாகக் கூறினார். லீக்கான கடிதம் குறித்த அவர் அளித்த மற்றொரு பேட்டியில், ‘நான் என்ன தவறு செய்தேன்? கடிதத்தை வெளியிட்டவர் யார்? என்று எனக்கு தெரிய வேண்டும். எனது ஆதரவாளர்கள் கடிதத்தை வெளியிடவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக கே.சி.ஆருக்கு பல கடிதங்கள் எழுதி உள்ளேன். அதுபோன்ற கடிதங்களை படித்துவிட்டு அவற்றை கிழித்துவிடுவார். ஆனால் இம்முறை எனது தந்தை பதிலளிக்கவில்லை. கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறேன். பதவிகளுக்காக கட்சியில் பணியாற்றவில்லை. கே.சி.ஆர் தான் என்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்ற அனுமதித்தார். நிஜாமாபாத் தொகுதிக்கு மீண்டும் பொறுப்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று மட்டுமே கோரினேன்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் நிஜாமாபாத்தில் தோல்வியடைந்ததற்கு, கட்சியில் உள்ள சில தலைவர்கள் எனக்கு எதிராக செயல்பட்டனர். நான் நேர்மையானவள். முதுக்கு பின்னால் குத்தும் அரசியலை நான் செய்வதில்லை’ என்று ஆவேசமாக கூறினார். தமிழ்நாட்டில் பாமக கட்சிக்குள் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனான அன்புமணி ராமதாசுக்கும் இடையிலான மோதல் நேற்று வெடித்த நிலையில், தற்போது தெலங்கானாவில் முன்னாள் முதல்வர் சந்திரசேகராவின் குடும்பத்திலும் பூகம்பம் வெடித்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது ஜாலியாக இருந்துவிட்டு, தற்போது ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர் மோதல் அதிகரித்துள்ளது. சந்திரசேகர ராவின் மகனும், மகளும் மோதிக் கொண்டுள்ளது தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணன் – தங்கை மோதலை முடிவுக்கு கொண்டு வரமுடியாமல் சந்திர சேகர ராவ் மவுனமாக இருப்பதால் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்குள் பிளவு ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பாமகவில் தந்தை – மகன் பிரிவுக்கு பாஜக ஒரு காரணமாக இருப்பது போல், பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்குள் அண்ணன் – தங்கை மோதலுக்கும் பாஜகவே ஒரு காரணமாக இருந்துள்ளது. மாநிலக் கட்சிகளை சின்னாபின்னமாக்குவதில் பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து அரசியல் விளையாட்டை கையாண்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அண்ணன் – தங்கை மோதலை முடிவுக்கு கொண்டு வரமுடியாமல் சந்திர சேகர ராவ் மவுனமாக இருப்பதால் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்குள் பிளவு ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நான் என்ன தவறு செய்தேன்? கடிதத்தை வெளியிட்டவர் யார்? என்று எனக்கு தெரிய வேண்டும். எனது ஆதரவாளர்கள் கடிதத்தை வெளியிடவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக கே.சி.ஆருக்கு பல கடிதங்கள் எழுதி உள்ளேன். அதுபோன்ற கடிதங்களை படித்துவிட்டு அவற்றை கிழித்துவிடுவார். ஆனால் இம்முறை எனது தந்தை பதிலளிக்கவில்லை.

The post தமிழ்நாட்டில் பாமகவில் தந்தை – மகன் சண்டை வீதிக்கு வந்தது போன்று தெலங்கானா அரசியலில் பூகம்பம்: அண்ணன் – தங்கை மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article