சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது என வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, நீலகிரி, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை. நீலகிரி, கோவை, தென்காசி, நீலகிரி, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.
மார்ச் முதல் மே வரையிலான கோடை மழை 97% கூடுதலாக பெய்துள்ளது. 13 செ.மீ. பெய்ய வேண்டிய நிலையில் 25 செ.மீ. மழை பெய்துள்ளது. 11 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னையில் 13 செ.மீ. கோடை மழை பெய்துள்ளது; இயல்பைவிட இது 129% அதிகம். 8 நாட்களில் அவலாஞ்சியில் 141 செ.மீ., சின்னக்கல்லாறு 101 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையில் ஒரு நாள் கூட வெயில் 40 டிகிரி செல்சியஸை தாண்டவில்லை. 3 மாதத்தில் வேலூர் மாவட்டத்தில் 16 நாட்கள் 40 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கோடை காலத்தில் வேலூர், கரூர், ஈரோடு, மதுரை மாவட்டங்களில் அதிகபட்ச வெயில் பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை இந்தியாவில் இயல்பைவிட 106% அளவுக்கு அதிகமாகும். தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் 110%ஐவிட அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் பருவமழை சராசரியாக 33 செ.மீ. மழை; ஆனால் 36 செ.மீ.க்கு மேல் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இயல்பைவிட மழை குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகம் பெய்த கோடை மழை: வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா தகவல் appeared first on Dinakaran.