சென்னை: தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 22-05-2025 அன்று தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை (23-05-2025) அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை அடுத்து உதகை, வால்பாறையில் பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். தொடர்ந்து திண்டுக்கல், தேனி, தென்காசியில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள தாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாகையில் கடந்த 24 மணி நேரத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேதாரண்யம்-5 செ.மீ., செய்யூர்-4.5 செ.மீ., பேச்சிப்பாறையில் 3.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை appeared first on Dinakaran.