சென்னை: தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்ரல் 18ம் தேதியும், ஈஸ்டர்டே ஏப்ரல் 20ம் தேதியும் கொண்டாடப்படவுள்ளன. இதற்கு இடைபட்ட ஏப்ரல் 19ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணி நடைபெறவிருக்கிறது. இதனால் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது.
இந்நிலையை உணர்ந்து ஏப்ரல் 19ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இது ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறந்த முறையில் கொண்டாட உதவும். மேலும், மற்ற ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து பணிகளுக்கு சிறு ஓய்வு கிடைக்கும். அவை அடுத்து வரும் நாட்களில் ஆசிரியர்கள் புத்துணர்ச்சியுடன் பணிபுரிவதற்கு வழிவகுக்கும். எனவே, ஏப்ரல் 19ம் தேதி சனிக்கிழமை விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு விடுமுறை வேண்டும் appeared first on Dinakaran.