பெரம்பூர்: தமிழ்நாடு முதலமைச்சரை பார்த்து தான் ஒன்றியமே இன்று பதற்றத்தில் உள்ளது என்பதற்கு அமித்ஷாவின் வருகையே ஒரு எடுத்துக்காட்டு என புளியந்தோப்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை சூளையில் உள்ள அகண்ட தண்டு மாரியம்மன் கோயில் மற்றும் பட்டாளத்தில் உள்ள 40 ஆண்டு பழமையான சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.
இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த பிறகு நிருபர்களை சந்தித்து கூறியதாவது:
திமுக ஆட்சி அமைந்து 3000க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி அமைந்து இதுவரை 117 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. இதுவரை 7,597.77 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அதனுடைய மதிப்பு 7,683 கோடி ரூபாய் ஆகும். திமுக ஆட்சி அமைந்து மொத்தம் 6,306 கோடி ரூபாய் மதிப்பில் 26,300 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இவ்வளவு பணி மேற்கொள்வது திராவிட மாடல் ஆட்சியில்தான். ஒன்றியத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். அமித்ஷா வருகை திமுகவிற்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பதற்றமோ, பயமோ திமுக ஆட்சிக்கு இல்லை. திமுக கூட்டணி வலுவாக தெளிவாக உள்ளது. பதற்றம் பாஜகவிடம் இருப்பதால்தான் அவ்வப்போது முக்கிய புள்ளிகள் தமிழ்நாட்டுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரை பார்த்துதான் ஒன்றியமே இன்று பதற்றத்தில் உள்ளது என்பதற்கு அமித்ஷாவின் வருகையே ஒரு எடுத்துக்காட்டு.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடத்தப்படும் முருகர் மாநாடுதான் பக்தி மாநாடு. அவர்கள் நடத்தக்கூடியது அரசியல் கட்சி சார்பில் நடத்தப்படும் முருகன் மாநாடு. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை செய்வது என்பது சற்று சவாலான பணி ஏனென்றால், ராஜகோபுரம் சற்று விரிசல் ஏற்பட்டு இருக்கக்கூடிய நிலையில் உள்ளது. இதை சரி செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திறனற்ற ஆட்சிக்கு ஒரு திட்டத்தை சாட்சியாக வைக்கவேண்டுமென்றால் கடந்த கால எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த ஆட்சிக்கு கிளாம்பாக்கம்தான் சாட்சி. திட்டமிடல் இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வடிவமைத்ததன் காரணமாக அதிமுக ஆட்சி காலத்தில் செப்பனிட முடியவில்லை. கிளாம்பாக்கத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற வடிகாலைகூட அதிமுக ஆட்சியில் அமைக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியேறும் பயணிகளுக்கான வழி மார்க்கங்கள், ரயில் நிலையங்கள்கூட அமைக்கப்படவில்லை. அங்கிருந்த பூங்காக்களை மேம்படுத்தவில்லை. முடங்கிக்கிடந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சரி செய்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வந்தவர் நம்முடைய முதலமைச்சர். சில தினங்களுக்கு முன்பு பயணிகள் அதிகளவில் குவிந்ததால், தேவையான பேருந்துகளை ஏற்பாடு செய்து பயணிகளின் திட்டமிட்ட பயணத்தை நிறைவேற்றி யுள்ளோம், திமுக ஆட்சியில் எந்தவிதமான தவறில்லை என்பதால் போக்குவரத்துதுறை சார்பிலும் அரசின் சார்பிலும் விரிவாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டது, ஒரு மணி நேரத்திற்குள்ளாக அனைத்தையும் சரி செய்து பயணிகளின் பயணத்தை இனிதாக்கிய அரசு எங்களுடைய அரசு. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கத்தான் செய்வார்கள். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
The post தமிழ்நாடு முதல்வரை பார்த்துதான் ஒன்றிய அரசு பதற்றத்தில் உள்ளது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.