சென்னை: தமிழக காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தவிதமான பாரபட்சமும் காட்டப்படுவதில்லை. அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கும் நிகழ்வுகளை பெரிதுபடுத்துகிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று, சட்டம்-ஒழுங்கு பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் முறைப்படி, விதிமுறைகளின்படி அனுமதி கேட்காவிட்டாலும், நீங்கள் அவரை பேச அனுமதி தந்தீர்கள். நீங்கள்கூட அனுமதி தருவதற்கு யோசித்தீர்கள். ஆனால், நான் உங்களிடம் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு அவரை பேச அனுமதித்தீர்கள். அதை பயன்படுத்திக் கொண்டு, அவர் முறையாக பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை.
ஏனென்றால், நான் பதிலளிக்கும்போது, வேறு ஏதாவது விஷயங்களை நான் எடுத்துச் சொல்லிவிடுவேன் என்று பயந்துகொண்டு, இன்றைக்கு அவர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். இருந்தாலும், நான் அவர்களுக்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். நேற்று 4 கொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் இங்கே தெரிவித்தார். கோவை சம்பவத்தை பொறுத்தவரையில், முதற்கட்டமாக தற்கொலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சம்பவத்தை பொறுத்தவரையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கையில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து விசாரித்ததில், குடும்ப தகராறு என தெரியவந்துள்ளது.
ஈரோட்டில் நடைபெற்ற சம்பவம் குறித்து நான் இப்போது விரிவாகச் சொல்ல விரும்புகிறேன். சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஜான் (எ) சாணக்கியன், உயர்நீதிமன்ற நிபந்தனை பிணையின் அடிப்படையில் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் கையொப்பமிட்டுவிட்டு, தன்னுடைய மனைவியுடன் காரில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பின்னால் காரில் சென்ற அடையாளம் தெரியாத சிலர் இருவரையும் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள். காயமடைந்த சாணக்கியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
அவரது மனைவி, சித்தோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தகவலறிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, இதில் தொடர்புடைய கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சரவணன், சதீஷ், பூபாலன் மற்றும் மைனா கார்த்திக் ஆகியோரை பச்சப்பாளி என்ற இடத்தில் காரை மறித்து கைது செய்ய முயற்சி செய்தபோது, சதீஷ் உள்ளிட்டோர் காவல் துறையினரை கொடிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனால் சித்தோடு காவல் ஆய்வாளர் பாதுகாப்பிற்காக அவங்களை நோக்கி சுட்டிருக்கிறார்.
இதில் சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி செல்லதுரை கடந்த 2020ம் ஆண்டு சேலம் மாநகரில் கொலை செய்யப்பட்ட வழக்கில், சாணக்கியன் இரண்டாவது எதிரி என்பதால், அதற்கு பழிவாங்குகிற நோக்கத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து இங்கு சில கருத்துகளை எதிர்க்கட்சி தலைவர் போகிற போக்கிலே சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். இவை குறித்த புள்ளிவிவரங்களோடு இந்த அவைக்கு சிலவற்றை நான் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 4,572 சமூக விரோதிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு காவல் துறை மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, 2023ம் ஆண்டு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள் 49,280 ஆக இருந்தது; 2024ம் ஆண்டில் அது 31,498 ஆக குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் 17,782 குற்றங்களை குறைத்திருக்கிறோம்.
சில கொலை குற்றங்கள் நடைபெறும் காட்சிகள், சமூக ஊடகங்களில் வெளிவரும்போது அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடைபெறுவது போன்ற தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகின்றது. உண்மையில் எண்ணிக்கையின் அளவில் பார்க்கும்போது, 2024ம் ஆண்டில் கொலை குற்றங்கள் 6.8 விழுக்காடு குறைந்திருக்கின்றன. அதாவது, முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 109 கொலைகள் குறைந்திருக்கின்றன. அதேபோல், பழிக்குப் பழி வாங்கும் கொலைகளின் எண்ணிக்கையும் 2024ம் ஆண்டில் 42.72 விழுக்காடு குறைந்துள்ளது.
குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதிலும் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 2023ம் ஆண்டில் 181 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், 2024ம் ஆண்டில் 242 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளில் காவல் துறை காட்டிய தீவிர அக்கறையே இதற்கு காரணம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 2024ம் ஆண்டில் மட்டும், 150 சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகளுக்கு மேல் கடுங்காவல் தண்டனை நீதிமன்றங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது.
குற்றங்களை தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, பொது அமைதியை தொடர்ந்து நிலைநாட்டிட தமிழ்நாடு காவல் துறை எனது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக முன்விரோதம் காரணமாக நடைபெறும் சில நிகழ்வுகளை வைத்து, இந்த அரசின் மீது பழி சுமத்தி அரசியல் ஆதாயம் அடைய நினைப்போர் சென்ற ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி சீரழிந்து கிடந்தது என்பதை நான் இங்கே தெரிவித்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் எண்ணிப் பார்க்க வேண்டும்.
காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தவிதமான பாரபட்சமும் இதில் காட்டப்படுவதில்லை. குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு மேற்கொள்ளப்படும் துரித நடவடிக்கைகள் ஒருபுறம், குற்ற சம்பவங்கள் நிகழாமல் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மறுபுறம் என இரு வகையிலும் காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
* அதிமுக ஆட்சியில்தான் கொலைகள் அதிகம்…
கடந்த 2012 முதல் 2024ம் ஆண்டுவரை நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக ஒப்பிட்டு பார்க்கும்போது, அதிமுக ஆட்சி காலத்தில், அதாவது, 2012ம் ஆண்டு நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,943. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மிக அதிகமான எண்ணிக்கை. 2013ம் ஆண்டு நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,927. கொரோனா காலத்திலும், லாக்-டவுன் இருந்தபோதும், அதிமுக ஆட்சி காலத்தில், 2020ம் ஆண்டில் நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,661.
கடந்த ஆண்டுகளின் வரலாறு இவ்வாறு இருக்க, தற்போது நமது ஆட்சி காலத்தில் காவல் துறை மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 12 ஆண்டுகளில் 2024ம் ஆண்டில்தான் மிக, மிக குறைவான எண்ணிக்கையில், அதாவது, 1,540 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன; இதுதான் உண்மை. இதை நடுநிலையாளர்களும், பொதுமக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் என்று முதல்வர் கூறினார்.
The post தமிழ்நாடு போலீஸ் சிறப்பாக செயல்படுகிறது குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.