தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஜூன் 2ம்தேதி தொடக்கம்- துணைவேந்தர் தகவல்

1 day ago 3

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நா.பெலிக்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2025-26-ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பங்கள் 2.6.2025, காலை 10 மணி முதல் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மீன்வளத் தொழிற்கல்வியை வழங்கி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளைக் கொண்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் இப்பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது.

தற்போது இப்பல்கலைக்கழகத்தில் உறுப்புக்கல்லூரிகள் மற்றும் 1 இணைப்புத் தனியார் கல்லூரி மூலம் 5 மீன்வளம் சார்ந்த 4 வருட பட்டப்படிப்புகள் மற்றும் 3 தொழில்சார் பட்டப்படிப்புகள் என மொத்தம் 8 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு (பி.எப்.எஸ்சி) தூத்துக்குடி, பொன்னேரி மற்றும் தலைஞாயிறு கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பொறியியல் கல்லூரியில் மீன்வளப் பொறியியல் பிரிவில் இளநிலை தொழில் நுட்பக்கல்வி (பி.டெக்) வழங்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தின், சென்னை-வாணியன்சாவடி OMR வளாகத்தில் உள்ள மீன்வள உயிர்தொழில்நுட்ப நிலையத்தில் இளநிலை உயிர்தொழில்நுட்பவியல் மற்றும் இளநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) படிப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாதவரம் வளாகத்தில் உள்ள மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை தொழில்நுட்பவியல் (உணவு தொழில்நுட்பவியல்) வழங்கப்படுகின்றது. பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட (UGC Approved) 3 வருட இளநிலை தொழில்சார் பட்டப்படிப்புகளானது, மீன்பதன தொழில்நுட்பம், உயிரின வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில்நுட்பம் ஆகிய 3 பிரிவுகளில் முறையே மாதவரம் (சென்னை), முட்டுக்காடு (சென்னை) மற்றும் மண்டபம் (ராமநாதபுரம்) ஆகிய தொழிற்கல்வி நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கல்வி ஆண்டில் (2025-26), 398 மாணவர்கள் உறுப்பு கல்லூரி மூலமாகவும், 55 மாணவர்கள் தனியார் இணைப்புக் கல்லூரி மூலமாகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் சிறப்பு ஒதுக்கீடாக அரசு வழிகாட்டுதலின்படி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக ஒதுக்கீடு 18 இடங்கள், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 4 இடங்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு 4 இடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிப்பவர்களுக்கு 7 இடங்களும், மீனவர் சமூகத்தினருக்கு (5% & 15%) 25 இடங்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 14 இடங்களும், வெளிநாட்டினருக்கு 5 இடங்களும், காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு 2 இடங்களும், சுயநிதி வழி மீன்வளப் பட்டப்படிப்பிற்கு (பி.எப்.எஸ்.சி) 20 இடங்களுக்குமான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

வெளி மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 9 இடங்களும், நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவின் (5%) கீழ் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பிற்கு 6 இடங்களும், இளநிலை தொழில்நுட்ப (மீன்வளப் பொறியியல்) பட்டப்படிப்பிற்கு ஒரு இடமும் கூடுதலாக வழங்கப்படுகின்றது. இப்பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் மற்றும் உணவுக்கட்டணம் ஆகிய அனைத்தும் தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் வழங்கப்படுகிறது. மீனவ சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள் இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இப்பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயில 2.6.2025 அன்று காலை 10 மணி முதல் www.admission.trjfu.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான கட்டணம் பட்டியலினத்தவர்களுக்கு ரூ.150, மற்றவர்களுக்கு ரூ.300. விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 27.6.2025 அன்று மாலை 5 மணி ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. சிறப்புப்பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டும் அதற்கான தகுதிச் சான்றிதழ்களை இணையதாம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு பொது கலந்தாய்வானது இணையதளம் வாயிலாக நடைபெறும் என்றும், சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு நடைபெறும் என்றும் பல்கலைகழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். கலந்தாய்வு தேதியானது பின்னர் அறிவிக்கப்படும். மேலும் தகவல் மற்றும் விபரங்கள் பெற தொலைபேசி (04365-211090), அலைபேசி (81221 44031) மற்றும் மின்னஞ்சல் ([email protected]) மூலமாக அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Read Entire Article