தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.5.5 லட்சத்திற்கான காசோலை - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

4 hours ago 1

சென்னை,

தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியின் கீழ் விளையாட்டு வீரர், வீராங்கனை இரண்டு நபர்களுக்கு மொத்தம் ரூ.5,50,000-க்கான காசோலைகளை வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (12.3.2025) 'Champions of Future' அகாடமியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பைக் பந்தய வீரர் செல்வன். ரெஹான் கான் ரஷீத்க்கு தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் மூலம் 5.00 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதனைகளை படைத்து வரும் தடகள வீராங்கனை பி.எம். தபிதாவுக்கு, பயிற்சிக்கு தேவையான சாதனங்களை வாங்குவதற்காக தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் மூலம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செக் குடியரசின் தலைநகரான பிராக் (Prague) கில் பிப்ரவரி 26 முதல் மார்ச் 7-ந்தேதி வரை நடைபெற்ற 7-வது பிராக் செஸ் திருவிழா – 2025 ன் (The Prague Chess Festival – 2025) மாஸ்டர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் தனது பெற்றோருடன் தமிழக துணை முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதே நிகழ்வில், மாடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் கராத்தே பயிற்சி பெற்ற மாணவி ஜான்சி ராணி லட்சுமி பாய் நுஞ்சாகு உபகரணத்தினை சுழற்றுவதன் மூலம் 1 நிமிடத்தில் 159 முறை 'Nunchaku Back Handrolls' செய்து 'கின்னஸ் உலக சாதனை' படைத்ததையொட்டி தமிழக துணை முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்வுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் பெற்றோர், பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article