தமிழ் மூத்த மொழிதான்; ஆனால் பிற மொழிகளை பற்றி இப்படி சொல்லலாமா? - சரத்குமார்

5 hours ago 3

விழுப்புரம்,

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம் கடந்த 5-ந்தேதி வெளியானது. முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், "தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது" என்று குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் கமல்ஹாசன், 'மன்னிப்பு கேட்க முடியாது' என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்த விவகாரத்தால் 'தக் லைப்' திரைப்படத்தை கர்நாடகத்தில் வெளியிட தடை விதிக்கப்படுவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.

இந்த நிலையில், கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதற்கான காரணம் தனக்கு புரியவில்லை என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் கமல்ஹாசன் எதற்காக அவ்வாறு பேசினார் என்பது தெரியவில்லை. தமிழ் மூத்த மொழிதான். ஆனால் தமிழில் இருந்துதான் கன்னடம் வந்தது என்பதற்கான ஆதாரம் கமல்ஹாசனிடம் இருக்கிறதா? தான் ஒரு வரலாற்று ஆய்வாளர் கிடையாது என்று அவரே சொல்லிவிட்டார். அப்படி இருக்கும்போது அந்த கருத்தை அவர் பேசியதற்கான காரணம் எனக்கு புரியவில்லை.

முற்போக்கு சிந்தனையோடு நாம் முன்னேறி செல்ல வேண்டிய காலகட்டத்தில், இதுபோன்ற சர்ச்சைகளால் நாம் என்ன பயனடையப்போகிறோம்? கர்நாடகத்திற்கும், நமக்கும் ஒரு பெரிய பிரச்சினையை உருவாக்குவதற்கு அவரது பேச்சு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்த விவகாரத்தில் சீமானை தவிர, தங்களை தமிழ் பற்றாளர்கள் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க.வினர் உள்பட வேறு யாரும் கருத்து சொல்லாதது ஏன்? கன்னடம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் உள்ளிட்டவை அனைத்தும் செம்மொழி அந்தஸ்து பெற்றவை. இந்த நிலையில், பிற மொழிகளை பற்றி இப்படி பேசலாமா? தமிழ் பற்றி இருப்பது தவறு கிடையாது. ஆனால் பிற மொழிகள் இதில் இருந்துதான் வந்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள்தான் சொல்ல வேண்டும்."

இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார். 

Read Entire Article