ஆலந்தூர்: தமிழ் மொழி பிடிக்கும் என்று பேசும் பிரதமர் மோடியே இந்தியை திணிக்கலாமா என்று அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஆலந்தூர் தெற்கு பகுதி 163 மற்றும் 165வது வார்டு திமுக சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. 165வது வார்டு வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். தெற்கு பகுதி செயலாளர் என்.சந்திரன், வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், கவுன்சிலர் பூங்கொடி ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் வேலவன் வரவேற்றார். விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு 2,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர்.
இதில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது; இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் தொகையை குறைக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று எல்லா மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பினார். அப்போது தமிழ்நாடு மக்கள் இதை கடைபிடித்ததால் மக்கள் தொகை குறைந்தது. காமராஜர், அண்ணா, கலைஞர் ஆட்சிக் காலத்தில் கல்வி மாநில பட்டியில் இருந்தது. ஆனால் மாநிலத்தை கேட்காமல் புறந்தள்ளிவிட்டு மத்திய அரசே கல்வியை மத்திய பட்டிலுக்கு மாற்றியது. தற்போது நாங்கள் சொல்வதை கேட்கவில்லையென்றால் கல்வி மானிய தொகை தர மாட்டோம் என்கின்றனர். தேசிய கல்வி கொள்கை மூலம் தேர்வில் தோல்வி அடைந்தால் விஷவகர்மா திட்டத்தில் கடன் தருகிறோம் என்று நாக்கில் தேன் தடவி கொண்டு இருக்கிறார்கள். இந்த திட்டத்தை ஆதரித்தால் நம்மை முட்டாள் ஆக்கி விடுவார்கள்.
தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வந்தால் தமிழ் மொழி பழமையானது, திருக்குறள் பிடிக்கும் என்கிறார். காசியில் தமிழ் சங்கம் ஆரம்பித்துள்ளார். ஐ.நா. சபையில் திருக்குறள் பேசுகிறார். நிதியமைச்சர் திருக்குறளை சொல்கிறார். சமீபத்தில் கோவை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் பிடிக்கும் என்கிறார். இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை ஆக்கினால் நீங்கள் சொல்வது உண்மை என்று அர்த்தம். தமிழ் பிடிக்கும் என்று கூறிவிட்டு மறைமுகமாக இந்தியை கொண்டு வருவது நியாயமா? இந்தியில் இலக்கியம் உள்ளது. தமிழுக்கு 4 ஆயிரம் ஆண்டுகள் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார். அமைச்சர் அன்பரசன் பேசும்போது, ‘’நமது முதல்வர் மிசா கொடுமையை அனுபவித்தவர். நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார். தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது’ என்றார். இந்த கூட்டத்தில், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் இப்ராகிம், இரா.பாஸ்கர், ஆர்.டி.பூபாலன், வட்ட செயலாளர்கள் சீனிவாசன், உலகநாதன், சாலமோன், ஜெ.நடராஜ், ஏசுதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் மனோகரன், பெருமாள், பூவராகவன், ஜெயராம் மார்த்தாண்டன், கே.ஆனந்தன், சுகுணா, மீன் மோகன் கலாநிதி, குணாளன், கேபிள் ராஜா, தரணிவேந்தன், கே.கே.சண்முகம், மணிகண்டன், ரமணா, பிரான்சிஸ், அபுதாஹீர், எஸ்.காஜா மொய்தீன், இளைஞரணி விக்கி, பிரவீன்குமார், கார்த்திக், விஜய் பாபு, அஜித், கார்த்திக், தீபக், தீனன் கலந்துகொண்டனர்.
The post தமிழ் பிடிக்கும் என்று கூறும் பிரதமரே தமிழகத்தில் இந்தியை திணிக்கலாமா? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி appeared first on Dinakaran.