தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை பொருட்கள் விற்பனை களைகட்டியது

4 months ago 12

* விழுப்புரத்தில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்

* போக்குவரத்து நெரிசல், போலீசார் கண்காணிப்பு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை பொருட்கள் விற்பனை களை கட்டியது. இதனை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

நாடு முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

மண்பானையில் பொங்கலிட்டு படையிலிடுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது இதனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பொங்கல் பொருட்கள் வாங்க விழுப்புரம் நகரில் பொதுமக்கள கூட்டம் அலைமோதியது.

புதுப்பானையில் பொங்கலிடும் மரபுக்காக குயவர்களால் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பொங்கலுக்கு பெயர்போன கரும்புகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பன்னீர் கரும்புகள் இலவசமாக வழங்கப்பட்டாலும் கடைவீதிகளில் பன்னீர் கரும்புகள் விற்பனை சூடுபிடித்து காணப்பட்டது. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.600 முதல் ரூ.700 வரையும், ஒரு ஜோடி கரும்புகள் ரூ.50 முதல் ரூ.65 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கரும்பு விலை உயர்ந்தாலும் அதை பொருட்படுத்தாமல் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக மார்க்கெட் மற்றும் கடைவீதிகளுக்கு திரண்டு சென்று ஆர்வமுடன் கரும்புகளை வாங்கிச்சென்றதை காணமுடிந்தது.

அதேபோல் பொங்கல் விற்பனையில் அங்கம் வகிக்கும் மஞ்சள் கொத்து மற்றும் சிறுவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும், காய்கறி வகைகளும் விழுப்புரம் எம்.ஜி. சாலையில் உள்ள பெரிய மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த கரும்புகள், மஞ்சள் கொத்து மற்றும் கிழங்கு வகைகள், காய்கறி வகைகள் என பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிச் சென்றனர்.
இதனால் பொங்கல் பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பொருட்களை வாங்க விழுப்புரம் நகரில் நேற்று எம்.ஜி.சாலை பெரிய மார்க்கெட், பாகர்ஷா வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் மார்க்கெட்டிற்குள் பொருட்கள் வாங்கச்சென்றவர்களாலும், பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்தவர்களாலும் விழுப்புரம்-புதுச்சேரி சாலை, கே.கே.ரோடு, பாகர்ஷா வீதி, திரு.வி.க. வீதி, காமராஜர் வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசார் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.

மேலும் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் யாரேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க நகரின் முக்கிய இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக விழுப்புரம் வீரவாழியம்மன் கோயில் அருகிலும், பழைய பஸ் நிலையம், காமராஜர் வீதி, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தென் மாவட்ட ரயில்,பஸ்கள் ஹவுஸ்புல்……

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூரில் தங்கி படிப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். அதுவும் 6 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில், பேருந்துகள் ஹவுஸ்புல்லாக செல்கின்றன.

இதனிடையே விழுப்புரம் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் தென் மாவட்டம் செல்லும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் படியில் அமர்ந்தவாறு
பயணிகள் சென்றதை காண முடிந்தது.

The post தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை பொருட்கள் விற்பனை களைகட்டியது appeared first on Dinakaran.

Read Entire Article