சென்னை: தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என்பதால் 13 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். வெளியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனிடையே இம்மாத இறுதி வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக வெப்ப நிலை காரணமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. சேலத்தில் 102 டிகிரி பாரான்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. அதேபோல ஈரோடு, கரூர் பரமத்தி மற்றும் வேலூரில் 101 டிகிரி பாரான்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில், திருத்தணி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் 100 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவானது. அதன்படி இன்றும் தமிழகத்தில் 13 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும்.
அதேபோல் தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: 13 இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.