
சென்னை,
வருமான வரியை பொறுத்தவரை கடந்த ஆண்டு வரை புதிய வருமான வரி முறைப்படி ஆண்டுக்கு 7.25 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரியாக ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டியது இல்லை. அதேபோல் பழைய வருமான வரிமுறைப்படி ஆண்டுக்கு ஐந்து லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் வருமான வரி கட்ட தேவையில்லை. (இப்போது மாறிவிட்டது). இதில் பழைய முறைப்படி 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும்.அதேபோல் வரியும் குறைவாவே கட்ட வேண்டியதிருக்கும். இதில் பல்வேறு சேமிப்பு, காப்பீடு மற்றும் லோன் போன்றவற்றை கணக்கு காட்ட வேண்டும்.
இந்நிலையில் தமிழகத்தில் மிகப்பெரிய வருமான வரி மோசடி நடந்துள்ளதாக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் வருமான வரி கணக்கில் மோசடி செய்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. பொதுத்துறை, தனியார் நிறுவன ஊழியர்கள் போலி ஆவணங்கள் மூலம் ரூ.500 கோடிக்கு வருமான வரி மோசடி செய்துள்ளது அம்பலமாகி உள்ளது.
தமிழகத்தில் 22,500 பேர் போலி ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளதாகவும், போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, வரி ஏய்ப்பு, வரி திரும்ப பெறும் மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுத்துறை, தனியார் ஊழியர்களின் வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.