சென்னை : அரசு விரைவு பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் 7.74 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் பயணிப்போர், கடைசி நேர நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. அதன்படி, www.tnstc.in, TNSTC மொபைல் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்து பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் 7,74,493 பயணிகள் முன்பதிவு செய்து அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதன் மூலம் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன் கடந்த ஜனவரி மாதத்தில் 6,64,632 பயணிகள் முன்பதிவு செய்து அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே முகூர்த்தம், பக்ரீத், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு வரும் 6,7 ஆகிய தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, . திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வரும் 6ம் தேதி 520 பேருந்துகளும் 7ம் தேதி 550 பேருந்துகளும் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி சாதனை!! appeared first on Dinakaran.