
மதுரை,
மதுரையை சேர்ந்த ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களை வெளியேற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு இது தொடர்பாக அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியகிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் 16 பேர் நீண்ட கால விசா பெற்று உள்ளனர். 24 பேர் நீண்ட கால விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். இவர்கள் மத்திய அரசின் செல்லுபடியாகும் விசாவின் கீழ் தமிழகத்தில் தங்கியிருக்கின்றனர். இதை முறைப்படுத்த அல்லது அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் மீது 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதேபோல தமிழகத்தில் தற்போது மியான்மர் நாட்டை சேர்ந்த 95 பேர் தங்கியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிறப்பு முகாமில் இலங்கை உட்பட அனைத்து வெளிநாட்டினரையும் அவர்கள் தொடர்பான வழக்கு முடியும் வரை தங்க வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதே போல மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் விவகாரம் தொடர்பாக வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டப்படி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்தும் அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது. இந்த தகவல்களை பதிவு செய்து நீதிபதிகள், மத்திய அரசின் அறிக்கையை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.