
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 28-ந் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2 சென்டி மீட்டர், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை, சின்கோனா, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, வேலூர் மாவட்டம் பொன்னை அணை ஆகிய இடங்களில் தலா 1 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. மதுரை விமான நிலைய பகுதிகளில் அதிகபட்சமாக 106.7 டிகிரி வெயில் காணப்பட்டது.
இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இயல்பைவிட அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலையால் ஓரிரு பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம்.
அதேபோல, வருகிற 26-ந் தேதி வரையில் மத்திய வங்கக்கடல், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.