திருவள்ளூர்: மாநில அளவில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். “ஆரம்பகட்டத்திலேயே, புற்றுநோயை கண்டறிந்து தடுக்கும் வகையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று அமைச்சர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில், மாநில அளவில் 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா இன்று (மே 12) காலை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் நோயாளிகளிடம் நோய் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.