தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

5 hours ago 2

 சென்னை,

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுவார். வரும் நிதியாண்டான 2025-26-ம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிப்பார்.

2021-ம் ஆண்டு தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அதுதொடர்பான அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வெளியிட வாய்ப்பு உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இந்த பட்ஜெட், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த 2026-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டைதான் இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். எனவே தற்போது தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்தான் முழுமையாக இருக்கும். அதனால் இந்த பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு தீட்டி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே உள்ள திட்டங்களில் அளிக்கப்படும் உதவித்தொகை இந்த பட்ஜெட் மூலம் அதிகரிக்கப்படுமா? உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? இலவசமாக பெண்கள் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? போன்ற கேள்விகளை பெண்கள் மத்தியில் பட்ஜெட் எழுப்பியுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் மறுநாளில் வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார். அந்த வகையில் வேளாண்மை பட்ஜெட் 15-ந் தேதி (சனிக்கிழமை) தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 17-ந் தேதி சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கும்.இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

Read Entire Article