
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் புதிய அறிவிப்புகளை பட்டியலிட்டார்.
இந்த நிலையில், 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். சுமார் 1½ மணி நேரம் அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில், 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் வங்கிகளில் வேளாண்மைக்காக வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்று விவசாயிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். மேலும், புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த சட்டசபை கூட்டத் தொடர் 17-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், துறை சார்ந்த இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெறும். தொடர்ந்து, 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்.