
லக்னோ,
தலைநகர் டெல்லியில் இருந்து அசாமின் திப்ருகட் பகுதிக்கு நேற்று ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. உத்தரபிரதேசத்தின் ஹர்டோலி மாவட்டம் உமர்தாலி பகுதியில் சென்றபோது ரெயில் தண்டவாளத்தில் மரப்பலகை வைக்கப்பட்டிருந்ததை ரெயில் டிரைவர் (லோகோ பைலட்) கண்டார். இதையடுத்து அவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். பின்னர், தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்று பார்த்தபோது அதில் இரும்பு கம்பியால் மரப்பலகை கட்டப்படிருந்ததை கண்டுபிடித்தார். உடனடியாக இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த மரப்பலகையை அகற்றினர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார்? ரெயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் இருந்து மரப்பலகை அகற்றப்பட்டதும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.