ஏரல், ஜூன் 1: வைகுண்டம் வடகால் வாய்க்கால் பாசனத்தில் உள்ள பேய்குளம், பெட்டைக்குளம் மற்றும் கோரம்பள்ளம் குளம் தண்ணீரின்றி வறண்டதால் அப்பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்திருந்த வாழைகள் எல்லாம் கருகும் நிலை ஏற்பட்டது. ஏற்கனவே 2023ம் ஆண்டு கொட்டித்தீர்த்த அதி கன மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதில் இருந்து மீளாத நிலையில் தற்போது வாழையில் மகசூல் எடுக்கும் வேளையில் தண்ணீரின்றி வாழைகள் கருகி வருவதை பார்த்து மிகுந்த வேதனை அடைந்தனர். அத்துடன் குளங்களும் தண்ணீரின்றி வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும் உருவாகி வருகிறது.
இதனிடையே வை. வடகால் வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீரானது கடைசி பகுதி இப்பகுதி குளங்களுக்கு வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் சார்பில் பேய்குளம் நிலச்சுவன்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தி அதில் வை. வடகால் வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு இப்பகுதி குளங்கள் வரை தண்ணீர் கொண்டு வந்து பெருக்கிட வலியுறுத்தி ஜூன் 2ம் தேதி நெல்லை- தூத்துக்குடி மெயின் ரோட்டில் தட்டாப்பாறை விலக்கு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை சாயர்புரம் அருகேயுள்ள பேய்குளம் நிலச்சுவன்தார்கள் அபிவிருத்தி சங்கத்தில் வைகுண்டம் வடகால் பாசன உதவி செயற்பொறியாளர் சிவராஜன் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்ற சமாதான கூட்டம் நடந்தது.
இதில் வை. வடகால் வாய்க்காலில் தொடர்ந்து 30 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டு கடைசி குளமான கோரம்பள்ளம் குளம் வரை தண்ணீர் தரப்படும் என்றும், அணைகளின் தண்ணீர் இருப்பை அனுசரித்து மேலும் தண்ணீர் தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தட்டப்பாறை விலக்கு அருகே நாளை (2ம் தேதி) நடத்தவிருந்த சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். சமாதான கூட்டத்தில் பேய்குளம் நிலச்சுவன்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கம், சேர்வைகாரன்மடம் கிராம விவசாய அபிவிருத்தி சங்கம், கூட்டாம்புளி, குலையன்கரிசல், அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம் மற்றும் ஆறுமுகமங்கலம் விவசாய சங்கம் என பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post தட்டப்பாறையில் இன்று நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.