தஞ்சையில் நாளை கோலாகல விழா; 1.50 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

10 hours ago 3

தஞ்சை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார். நாளை தஞ்சையில் நடைபெறும் விழாவில் 1.50 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இன்றும் (15ம் தேதி), நாளையும் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டு விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு 12.15 மணிக்கு வருகிறார். அங்கிருந்து அவர் காரில் கல்லணைக்கு சென்று பொதுப்பணித்துறை தங்கும் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து விடுகிறார். பின்னர் அங்கிருந்து தஞ்சை கலைஞர் அறிவாலயத்துக்கு காரில் செல்கிறார். இதைத்தொடர்ந்து தஞ்ச கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ரயிலடி, ஆத்துப்பாலம் வழியாக பழைய பஸ் நிலையத்துக்கு 3 கிமீ தூரம் ரோடு ஷோ செல்கிறார். பின்னர் பழைய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் இரவு தஞ்சை சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை (16ம் தேதி) காலை 9 மணிக்கு எம்எல்ஏ துரை சந்திரசேகரன் இல்ல திருமண நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைக்கிறார். பின்னர் தஞ்சை சரபோஜி மன்னர் அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் 1.50 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். இதைதொடர்ந்து தஞ்சை சுற்றுலா மாளிகைக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காரில் செல்கிறார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னை செல்கிறார். தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி இன்றும், நாளையும் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாவட்டம் முழுவதும் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் தண்ணீர் திறப்பதை முன்னிட்டு வர்ணம் பூசப்பட்டு கல்லணை ஜொலிக்கிறது.

 

The post தஞ்சையில் நாளை கோலாகல விழா; 1.50 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார் appeared first on Dinakaran.

Read Entire Article