தஞ்சை வடக்குவீதி ராஜ கோபால சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சித்திரை நட்சத்திரம் சிறப்பு வழிபாடு

3 months ago 10

தஞ்சாவூர், நவ.28: தஞ்சாவூர் வடக்கு வீதியில் புகழ்பெற்ற ராஜ கோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோயிலில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு மூலவராக விஜய வல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் 16 கரங்களுடன் அபூர்வமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரை பிரதி புதன்கிழமை மற்றும் சித்திரை நட்சத்திரம் தோறும் பக்தர்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இத்தலத்தில் கங்கை பார்வதி தேவி சமேதராக சிவேந்திரர் சன்னதியும் பகுளாமுகி காளியம்மன் சன்னதியும் உள்ளன. இத்தலத்தில் பக்தர்கள் தொடர்ந்து 48 தினங்கள் 24 வலம் வந்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோய்களும் குணமாகும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நேற்று கார்த்திகை மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு மூன்று சக்கரத்தாழ்வார்களுக்கும் 16 வகையான அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. தனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம், அர்ச்சனை தீபாராதனையும் நடைபெற்றது. இத்தலத்தில் பிரதி சித்திரை நட்சத்திரம் தோறும் மட்டும் மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர கருவறையில் காட்சி தருகிறார்கள்.முன்ஜென்மத்தில் செய்த புண்ணியம் இருந்தால் மட்டுமே மூன்று சக்கரத்தாழ்வார்களை தரிசனம் செய்ய இயலும் என்பது ஐதீகம். இன்றைய வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூன்று சக்கரத்தாழ்வார் களையும் தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோயில் செயல் அலுவலர்கள் மாதவன், மணிகண்டன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

The post தஞ்சை வடக்குவீதி ராஜ கோபால சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சித்திரை நட்சத்திரம் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Read Entire Article