தஞ்சாவூர் அருகே பயங்கரம் பாஜ மகளிரணி மாஜி நிர்வாகி தலை துண்டித்து படுகொலை: 2வது கணவரின் மகன் உள்பட 3 பேர் கைது

1 month ago 7

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் அருகே முன்னாள் பாஜ மகளிரணி நிர்வாகி தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது 2வது கணவர், மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை பெத்தானியபுரத்தை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (74). இவரது மனைவி நாகலெட்சுமி (55). இவர்களது ஒரே மகள் சரண்யா (35). இவர் மதுரையில் வசிக்கும்போது மதுரை மாநகர பாஜ மகளிரணி செயலாளராக இருந்துள்ளார்.

இவருக்கும், மதுரையை சேர்ந்த சண்முகசுந்தரம் (38) என்பவருக்கும் கடந்த 2001ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு சாமுவேல் (15), சரவணன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2021ல் சண்முகசுந்தரம் கொலை செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கழுகப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாலன். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கபிலன் (19) என்ற மகன் உள்ளார். பாலனுக்கும், சரண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் 2022ல் மதுரையில் 2வது திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மதுரையில் வசித்து வந்த அவர்கள், குடும்பத்துடன் கழுகப்புலிக்காட்டிற்கு வந்துவிட்டனர். அங்கு உதயசூரியபுரத்தில் பாலன் – சரண்யா தம்பதி ஒரு ஜெராக்ஸ் கடையும், கொண்டிகுளத்தில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றும் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் உதயசூரியபுரத்தில் உள்ள ஜெராக்ஸ் கடையை பூட்டிவிட்டு பாலன் பைக்கில் வீட்டிற்கு சென்று விட்டார். அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டிற்கு சரண்யா நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரண்யாவை பின்தொடர்ந்து வந்து அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பினர். தகவலறிந்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அதில், பாலனின் சொத்துக்களை அவரது மகன் கபிலனுக்கு வழங்க சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால், கபிலன் தனது நண்பர்களான குகன், பார்த்திபன் ஆகியோருடன் சேர்ந்து சரண்யாவை கொலை செய்தது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், கபிலன் (20), அவரது நண்பர்கள் குகன் (20), பார்த்திபன் (20) ஆகிய 3 பேரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சரணடைய வந்தனர். ஆனால், சம்பவ இடத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் தான் சரணடைய வேண்டுமென நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து பட்டுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதற்கிடையே, சரண்யாவின் 2வது கணவரான பாலனை போலீசார் கைது செய்தனர்.

* அமைச்சர் கார் மீது செருப்பு வீசியவர்
கொலையான பாஜ பிரமுகர் சரண்யா மீது, மதுரை பெருங்குடி காவல்நிலையத்தில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தஞ்சாவூர் அருகே பயங்கரம் பாஜ மகளிரணி மாஜி நிர்வாகி தலை துண்டித்து படுகொலை: 2வது கணவரின் மகன் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article