
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'தசரா'. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த 'தசரா' படம் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இப்படத்தைத்தொடர்ந்து, நானியின் 33-வது படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீகாந்த் ஒடேலாவின் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, வெளியாகியுள்ள தகவலின் படி, சிரஞ்சீவிக்கு இப்படத்தின் ஸ்கிரிப்ட் பிடித்துள்ளதாகவும், இருவருடனான முதல் சந்திப்பிலேயே இது உறுதியானதாகவும் தெரிகிறது. சிரஞ்சீவி தற்போது, 'விஸ்வம்பரா' படத்தில் நடித்துள்ளார். மல்லிடி வசிஷ்டா இயக்கியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.