கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம். காவேரிப்பட்டணம் அருகே திம்மாபுரம் ஊராட்சி நேருபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவிதா (44). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு வைத்தீஸ்வரி, சாதிகா என்ற மகள்களும், சூர்யா (23) என்ற மகனும் உள்ளனர். வைத்தீஸ்வரிக்கு திருமணமாகி விட்டது. சாதிகா கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் ரங்கசாமிக்கும், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற ரங்கசாமி வீட்டிற்கு வரவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன் வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கவிதா மார்க்கெட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சூர்யாவும், அவரது தங்கை சாதிகாவும் சாப்பிட்டு விட்டு கதவை தாழ்ப்பாள் போடாமல் படுத்து தூங்கியுள்ளனர். இரவு 11 மணியளவில் அவர்கள் வீட்டின் மாடியில் இருந்து ஐயோ, அம்மா என்று ரங்கசாமி அலறும் சத்தம் கேட்டு சூர்யா, அவரது தங்கை சாதிகா ஆகியோர் எழுந்து மாடிக்கு ஓடினர். அப்போது அவரது தாய் கவிதா பதற்றத்துடன் மேலே இருந்து கீழே இறங்கி ஓடியுள்ளார்.
இதையடுத்து மாடிக்கு சென்று பார்த்த போது, ரங்கசாமி உடலில் பெட்ரோல் ஊற்றப்பட்டு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தார். உடனடியாக ரங்கசாமியை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 95 சதவீதம் உடல் முழுவதும் கருகிய நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து மகன் சூர்யா காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கவிதாவை தேடி வருகின்றனர்.
The post தகாத உறவை கைவிடாததால் ஆத்திரம் பெட்ரோல் ஊற்றி கணவனை எரித்து கொலை செய்த மனைவி appeared first on Dinakaran.