
பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்ததாக கடந்த ஆண்டு (2024) பெங்களூரு காமாட்சி பாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட்டு வெளிநாடுகளுக்கு செல்ல தடை உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலையானார். அதன்பிறகு, நடிகர் தர்ஷன் 'டெவில்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் நடைபெற்றது. இதற்கிடையே 'டெவில்' படத்தின் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.
இதையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்புக்காக வருகிற 1-ந் தேதி முதல் வருகிற 25-ந் தேதி வரை துபாய் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல அனுமதி கேட்டு நடிகர் தர்ஷன் சார்பில் பெங்களூரு 57-வது சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த 28-ந் தேதி, இந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது கொலை வழக்கில் தர்ஷன் 2-வது குற்றவாளி ஆவார். அவர் வெளிநாடு சென்றால், இந்தியாவுக்கு திரும்ப மாட்டார். எனவே வெளிநாடு செல்ல அனுமதி வழங்க கூடாது என்று அரசு தரப்பு வக்கீல் வாதிட்டார்.
பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த மனு மீது 30-ந் தேதி (அதாவது நேற்று) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, 'டெவில்' சினிமா படப்பிடிப்பில் பங்கேற்க வருகிற 1-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்கு நடிகர் தர்ஷனுக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் நடிகர் தர்ஷன் மற்றும் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
