
புதுடெல்லி,
டெல்லியில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டபோதும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
சுரங்க பாதைகளில் தேங்கிய மழைநீரில் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூழ்கியுள்ளன. அதுபற்றிய புகைப்படங்களும் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. வாகனங்கள் மழைநீரில் மிதந்தபடி செல்கின்றன. மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. சாணக்யபுரி, ஐ.டி.ஓ., சுப்ரதோ பூங்கா, நாணக்புரா மற்றும் தவுலா கான் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அக்பர் சாலையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இந்த திடீர் பருவ மாறுதலால் விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. 49 விமானங்கள் நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
இதனை முன்னிட்டு, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், தன்னுடைய பயணிகளுக்கு பயண அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. விமான சேவையை பற்றி அவ்வப்போது உறுதிப்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரெட் அர்ட் விடப்பட்டு உள்ளது. இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மக்கள் நீர் நிலைகளை தவிர்க்கும் படியும், மரங்களின் கீழ் தஞ்சம் புகாமல் இருக்க வேண்டும் என்றும் திறந்த வெளி பகுதிகளை தவிர்க்கும்படியும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.