டெல்லியில் ஒலித்த குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் : முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

2 hours ago 2

சென்னை,

திமுக மாணவரணி சார்பில் யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், கனிமொழி எம்.பி., துரை வைகோ எம்.பி. உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்று உரையாற்றினர்.

இந்த நிலையில், யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிரான திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்,

தலைநகரில் யுஜிசி வரைவு நெறிமுறைகளை எதிர்க்கும் போராட்டத்தில் மாணவர்களின் குரலை வலுப்படுத்தியதற்காகவும், கல்வியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தோள் கொடுத்தமைக்காகவும் நமது கழக மாணவரணியினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்கள் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு எனது நன்றிகள்.

பன்மைத்துவம் கொண்ட வரலாறு, பண்பாடு மற்றும் மொழிகளை அழித்து ஒற்றைத்துவத்தைத் திணிப்பது என ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் செயல்திட்டம் தெளிவாக உள்ளது.

"யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகள் வெறும் கல்விசார்ந்த நகர்வல்ல, அது தமிழ்நாட்டின் வளமான மரபின் மீதும், இந்தியக் கூட்டாட்சியியலின் அடிப்படை மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகும்" என சகோதரர் ராகுல் காந்தி மிகச் சரியாகச் சுட்டிக்காட்டினார்.

நீட், குடியுரிமைத் திருத்தச் சட்டம் முதல் மூன்று வேளாண் சட்டங்கள் வரை நமது அரசியலமைப்பினையும் பன்மைத்துவத்தையும் காப்பதற்கான அனைத்துப் போராட்டங்களையும் தி.மு.க. முன்னின்று நடத்தியுள்ளது. இன்று தலைநகரில் முழங்கிய நம் குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும்! என பதிவிட்டுள்ளார்.

Read Entire Article