
புதுடெல்லி,
டெல்லி தில்ஷாத் கார்டன் பகுதியில், கொடி காலனியில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி இரவு 11.32 மணியளவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி தீயணைப்பு துறை அதிகாரி அனுப் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, நாங்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டோம். தீயை அணைத்த பின்னர், 2 இ-ரிக்சாக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து போயிருந்தது தெரிய வந்தது.
இந்த தீ விபத்து சம்பவத்தில், 2 பேர் பலியாகி உள்ளனர் என கூறியுள்ளார். அவர்களில் ஒருவர் 24 வயது வாலிபர். மற்றொருவர் 60 வயது முதியவர். இ-ரிக்சாக்களை சார்ஜிங் செய்தபோது, தீ விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என அவர் கூறினார். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் டெல்லியின் ஷாதரா பகுதியில் இ-சார்ஜிங் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி 2 பேர் பலியானார்கள். அவர்கள் டீன்-ஏஜ் வயதினர் ஆவர். இவர்கள் தவிர 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஜி.டி.பி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.