கோவை: கோவை வழியாக இருசக்கர வாகனத்தில் ரூ.60 லட்சம் ஹவாலா பணம் கடத்தி சென்ற இருவரை பிடித்து கேரளா கலால் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கோவையில் இருந்து கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக கேரளா கலால் துறை அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவை-கேரளா எல்லையான வாளையாறு கலால் சோதனைச் சாவடி அருகே கலால் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவையில் இருந்து கேரளா நோக்கி வந்த இருசக்கர வாகனம் ஒன்றை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரதிஷ் (40) மற்றும் உடன் வந்த சுனில் சிவாஜி ஆகிய இருவரை போலீசார் சோதனையிட்ட போது இருவரும் தங்களது உடலிலும் கட்டு கட்டாக பணத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் எந்த விதமான ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.60 லட்சத்தை கலால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.60 லட்சம் பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
The post டூவீலரில் ரூ.60 லட்சம் ஹவாலா பணம் கடத்தல் appeared first on Dinakaran.