
சென்னை,
தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ், 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் உள்ளிட்ட ஏராளமான டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இதில், மொத்தம் 20 ஆயிரத்து 635 டிப்ளமோ படிப்பு இடங்கள் இருக்கின்றன. முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்புக்கு 17 ஆயிரத்து 723 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில், 8 ஆயிரத்து 880 மாணவர்களுக்கு டிப்ளமோ படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், பாலிடெக்னிக் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு 16 ஆயிரத்து 288 மாணவர்கள் விண்ணப்பத்துள்ளனர். அவர்களில், 4 ஆயிரத்து 898 மாணவர்களுக்கு 2-ம் ஆண்டு சேர்க்கை ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டுகளை போலவே, நடப்பு கல்வியாண்டிலும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ மாணவர் சேர்க்கை மந்த நிலையிலேயே சென்றுக் கொண்டிருக்கிறது. டிப்ளமோ படிப்பை பொறுத்தவரையில், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் ஆகிய படிப்புகளை மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு செய்கிறார்கள்.
ஆனால், சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்திருப்பதாக தொழில்நுட்க கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். தற்போது, மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு கல்லூரிகளில் நேரடி சேர்க்கையாக நடத்தப்படுகிறது. கால நிர்ணயம் ஏதுமின்றி வருகிற ஆகஸ்டு மாதம் வரையில் மாணவர் சேர்க்கை நடத்திடவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் திட்டமிட்டு வருகிறது.