நெல்லை: தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 5ல் கோவையில் தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் பாபா, தமிழ்நாடு பிரிமியர் லீக் தலைவர் பாலகிருஷ்ணா, தலைமை செயல் அலுவலர் பிரசன்ன கண்ணன் ஆகியோர் நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளின் 9வது சீசன் வருகிற ஜூன் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது.
கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஜூன் 5ம் தேதி போட்டிகள் துவங்குகின்றன. ஜூன் 13 முதல் சேலம் கிரிக்வுண்டேஷன் மைதானத்திலும், ஜூன் 21 முதல் 26 வரை நெல்லையில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்திலும் போட்டிகள் நடக்கிறது. எஞ்சிய போட்டிகள் மற்றும் ப்ளே ஆப் சுற்றுகள் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சேலாஸ் ஆகிய 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. ஜூலை 1ம் தேதி முதல் தகுதிச்சுற்று போட்டியும், 2ம் தேதி வெளியேற்றும் சுற்று போட்டியும், 4ம் தேதி 2வது தகுதிச்சுற்று போட்டியும் நடக்கிறது. இறுதிப்போட்டி ஜூலை 6ம் தேதி திண்டுக்கல்லில் நடக்கிறது. இந்த சீசனில் 6 இரட்டை ஆட்டங்கள் நடக்கிறது. இரட்டை ஆட்டங்கள் நடக்கும் நாட்களில் முதல் போட்டி மாலை 3.15 மணிக்கு துவங்கும். மின்னொளி போட்டிகள் இரவு 7.15 மணிக்கு துவங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post டிஎன்பிஎல் 9வது சீசன் ஜூன் 5ல் தொடக்கம்: 8 அணிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.