
சென்னை,
டி.என்.எஸ்.டி.சி. எனப்படும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் 8 கோட்டங்களில் 3,274 டிரைவருடன் கூடிய கண்டக்டர் (டி.சி.சி.) பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கடந்த மாதம் 21-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுனர் உரிமம், குறைந்தபட்சம் 18 மாத அனுபவம், முதலுதவிச் சான்று, செல்லத்தக்க நடத்துனர் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.
அரசு விதிப்படி இடஒதுக்கீடு வழங்கப்படும். பணிக்கான தகுதியும் விருப்பமும் உடையவர்கள் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக ரூ.1180 செலுத்தியும், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் ரூ.590 செலுத்தியும் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.
விண்ணப்பப் பதிவு நிறைவைத் தொடர்ந்து எழுத்து, செய்முறை, நேர்முகத் தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு குறித்த விவரங்கள் விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகும்.