டி.என்.பி.எல். கிரிக்கெட்: இன்று நடைபெறும் கடைசி சுற்று போட்டிகள்

5 hours ago 1

திண்டுக்கல்,

9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று கட்ட லீக் போட்டிகள் கோவை, சேலம், நெல்லையில் நடந்து முடிந்துள்ளது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

இன்னும் 4 லீக் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இதுவரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இரண்டு முறை சாம்பியனான கோவை கிங்ஸ் வெளியேறி விட்டது. மீதமுள்ள ஒரு 'பிளே-ஆப்' இடத்துக்கு 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. அங்கு இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

மாலை 3.15 மணிக்கு நடக்கும் 25-வது லீக் போட்டியில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்சை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆடியுள்ள 6 போட்டிகளிலும் அமர்க்களமாக வெற்றியை பெற்று கம்பீரமாக பயணிக்கிறது.

பேட்டிங்கில் கேப்டன் பாபா அபராஜித் (3 அரைசதத்துடன் 295 ரன்) விஜய் சங்கர், ஆஷிக், பந்து வீச்சில் அபிஷேக் தன்வர் (12 விக்கெட்), பிரேம்குமார், லோகேஷ் ராஜ் உள்ளிட்டோர் சூப்பர் பார்மில் உள்ளனர். லீக் சுற்றை வெற்றியோடு முடிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கில்லீசின் வீறுநடை தொடர்ந்தால், தூத்துக்குடி பேட்ரியாட்சுக்கு பிறகு (2017-ம் ஆண்டில் 7-ல் வெற்றி) லீக் சுற்றில் 7 போட்டிகளையும் முழுமையாக வென்ற அணி என்ற பெருமையை பெறும்.

2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள மதுரை அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் இமாலய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளே-ஆப் வாய்ப்பு பற்றி கொஞ்சமாவது நினைத்து பார்க்க முடியும். மற்றபடி இந்த போட்டியின் முடிவால் எந்த தாக்கமும் இருக்காது.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 5-ல் மதுரையும், 3-ல் சேப்பாக் சூப்பா கில்லீசும் வெற்றி கண்டுள்ளன.

இரவு 7.15 மணிக்கு நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் அபிஷேக் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

முதல் 3 போட்டிகளில் வாகை சூடிய சேலம் அணி, அடுத்த 3 போட்டிகளில் வரிசையாக தோற்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி கண்டால் சிக்கலின்றி 4-வது அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்து விடும்.

மாறாக தோல்வியை தழுவினால் நெல்லை, திருச்சி போன்ற அணிகளுக்கு 'பிளே-ஆப்' கதவு திறக்கும். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட கோவை அணி (1 வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளி) ஆறுதல் வெற்றியோடு நிறைவு செய்ய முனைப்பு காட்டும்.

Read Entire Article