ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை மேலாளர் விசாரணைக்கு ஆஜரானார்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தி்ல் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1.000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 16-ம் தேதி சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, எம்ஆர்சி நகரில் உள்ள தொழிலதிபர் ரித்தீஷ் வீடு உட்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 நாட்களாக நடைபெற்ற சோதனை 17-ம் தேதி நள்ளிரவு நிறைவடைந்தது.