
திருச்சி,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக வலைத்தளங்களில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்ததாக திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு விசாரணை, திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்-4 ல் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு பிப்.19-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சீமான் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) பாலாஜி, வழக்கை ஏப்.7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். 7-ம் தேதி இவ்வழக்கு நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதும், சீமான் ஆஜராகவில்லை. அப்போது சீமான் மே 8ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் சீமான் அன்றும் ஆஜராகவில்லை. எனவே வழக்கு விசாரணை மே 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கடைசி வாய்ப்பு இது எனக்கூறி விசாரணையை மே 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றைய தினமும் சீமான் ஆஜராகவில்லை. தொடர்ந்து சீமான் ஆஜராகாமல் இருந்து வரும் நிலையில்,
சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கை இன்று விசாரித்த திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், வரும் ஜூலை 7ம் தேதி விசாரணைக்கு நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும். ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.