ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த திட்டம் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது

5 days ago 2

புதுடெல்லி: நீண்ட தூர மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணத்தை உயர்த்த ஒன்றிய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றிய பாஜ அரசு வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வரி விதிப்பு, பிரீமியம் கட்டணம் என பல்வேறு வகையில் வருவாயை அதிகரிப்பதற்கான பல்வேறு வழிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ரயில்களில் சாதாரண 2ம் வகுப்பில் பணிக்க 500 கிலோ மீட்டர் வரை கட்டண உயர்வு இல்லை.

500 கிலோ மீட்டருக்கு மேல் 2ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு அரை காசு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல், மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண வகுப்பில் பயணிக்க கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு காசு எனவும், அனைத்து ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் பயணிக்க கட்டணம் கிலோ மீட்டருக்கு இரண்டு காசு எனவும் உயர்த்த உள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவலுக்குப் பிறகு முதல் முறையாக இந்த கட்டண உயர்வு அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றபடி புறநகர் ரயில் டிக்கெட்கள், சீசன் டிக்கெட்டுகள் உயர்த்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்கச் செலவு அதிகரிப்பு மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறின. கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அதே ஆண்டு ஜூன் மாதத்தில் ரயில் கட்டணம் மற்றும் சரக்குப் போக்குவரத்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. ரயில் கட்டணங்கள் 14.2 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதுபோல் ரயில் சரக்குப் போக்குவரத்துக் கட்டணமும் 6.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.

அப்போது, ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்தும் நோக்கில் கசப்பு மருந்தாக இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி விமர்சித்து, கட்டண உயர்வை நியாயப்படுத்தினார். இதன் மூலம் அந்த ஆண்டிலேயே ரயில்வேக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டது. உதாரணமாக, யூரியாவுக்கு 10 சதவீதம், நிலக்கரிக்கு 6.3 சதவீதம், இரும்புப் தாது மற்றும் ஸ்டீலுக்கு 0.8 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.

நேரடியான கட்டண உயர்வு மட்டுமின்றி, பிரீமியம் கட்டண ரயில் சேவைகளை அறிமுகம் செய்தும், மறைமுகமாக கட்டணம் உயர்த்தப்பட்டது. சில பகுதிகளில் கொரோனா பரவலுக்குப் பிறகு பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டதும் மறைமுக கட்டண உயர்வுக்கு வழி வகுத்தது. ரயில்வேக்கு என தனி பட்ஜெட்டை ஒழித்த ஒன்றிய பாஜ அரசு, சத்தமில்லாமல் இதுபோன்ற முடிவுகளை அமல்படுத்துவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், மீண்டும் கட்டண உயர்வை அமல்படுத்தும் முடிவு, மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

* மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண மற்றும் ஏசி வகுப்புகளில் 500 கிலோ மீட்டருக்கு மேல் கட்டண உயர்வு அமலுக்கு வரும்.

* இயக்கச் செலவுகளை ஈடுகட்டுவது மற்றும் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

The post ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த திட்டம் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article