ஜூன் 2 முதல் 10ம் தேதி வரை பிரமோற்சவம் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

1 day ago 4

*கோயில் ஏஇஓ பங்கேற்பு

திருமலை : திருப்பதியில் கோவிந்தராஜ சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வரும் ஜூன் 2 முதல் 10ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடு கோயில் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரமோற்சவத்தையொட்டி ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை சுவாமி, தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள் பாலிக்க உள்ளனர்.

அதன்படி, வரும் 1ம் தேதி மாலை அங்குரார்ப்பணத்துடன் பிரமோற்சவம் தொடங்குகிறது. தொடர்ந்து, 2ம் தேதி காலை மிதுன லக்னத்தில் பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெறும். இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி தாயார்களுடன் பக்தர்களுக்கு வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.

அதைத்தொடர்ந்து, 3ம் தேதி காலை சின்ன சேஷ வாகனம், இரவு அன்ன வாகனம், 4ம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துபந்தல் வாகனம், 5ம் தேதி காலை கற்பக விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகனம், 6ம் தேதி மோகினி அவதாரம், இரவு கருட வாகனம், 7ம் தேதி காலை அனுமந்த வாகனம், இரவு கஜ வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக வரும் 8ம் தேதி காலை சூரிய பிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனம், 9ம் தேதி காலை தேர் திருவிழா, இரவு குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலிக்க உள்ளார். தொடர்ந்து, 10ம் தேதி காலை சக்ரத்தாழ்வார் தீர்த்த்வாரி, இரவு கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.

பிரமோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் இந்து தர்மபிரசார பரிஷத், அன்னமாச்சார்யா திட்டம், தாசசாகித்ய திட்டங்கள் சார்பில் தினமும் ஆன்மிக, பக்தி இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், பிரமோற்சவத்தை முன்னிட்டு கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நேற்று நடைபெற்றது. அதற்படி காலை 6.45 மணிக்கு ஆழ்வார் திருமஞ்சனம் ஆரம்பமானது. இதன் ஒரு பகுதியாக கோவிந்தராஜ சுவாமி சுப்ரபாத சேவையுடன் தொடங்கி கோயில் வளாகத்தில் உள்ள பிற கோயில்களின் சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் தண்ணீரால் தூய்மைப்படுத்தப்பட்டன.

பின்னர், நாமகட்டி, திருச்சூர்ணம், கஸ்தூரி, மஞ்சள், பச்சைகற்பூரம், கற்பூரப் பொடி, சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலி கிழங்கு பொடி மற்றும் பிற மூலிகை பொருட்கள் கலந்த புனித நீர் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கோயில் ஏஇஓ முனி கிருஷ்ணா ரெட்டி, தலைமை அர்ச்சகர் ஏ.பி.னிவாச தீட்சிலு, கோயில் ஆய்வாளர் தனுஞ்சயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post ஜூன் 2 முதல் 10ம் தேதி வரை பிரமோற்சவம் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article