
ராஞ்சி,
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் பலிபா கிராமம் சரண்டா வனப்பகுதியில் நேற்று விறகு சேகரிக்க அந்த கிராமத்தை சேர்ந்த சஹு பர்ஜொ சென்றுள்ளார். அப்போது, அங்கு நக்சலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடியில் சஹு பர்ஜொ சிக்கினார். கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த சஹு பர்ஜொ சிக்சிசைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்த நக்சலைட்டுகள் கண்ணிவெடியை பதுக்கி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்புப்படையினர் வனப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.